Saturday, January 30, 2010

நீ . . . நான் . . . நிலவு . . .


நாம் இரவில் உரையாடுகையில்
நீ நான் நிலவு மட்டுமே விழித்திருப்பதாய்
சொல்வாயே முன்பெல்லாம்
இன்று நானும் நிலவும் இங்கே
உனக்காய் காத்திருக்கையில்
நீ மட்டும் கதிரவனோடு உறவாடி
என்னையும் நிலவையும் மறந்து
செல்வது தகுமா நியாயம் சொல்வாயா நீ . . .

Monday, January 25, 2010

நீ யாரைப் போலென்று நான் சொல்லட்டுமா . . .

நீ எந்த நடிகனைப் போல் இருப்பதாக
மற்றோர் கூறுவர் என்றேன்
உனக்குத் தெரியாதென்றாய்
நான் சொல்லட்டுமா நீ யாரைப் போலென்று

நீ சூர்யா மாதிரி - உருவத்திலல்ல
அவரது திரைப்படக் கதாபாத்திரங்களில்

உன் வேகத்தில் காக்க காக்க சூர்யா
உன் மௌனத்தில் மௌனம் பேசியதே சூர்யா

உன் கோபத்தில் நந்தா சூர்யா
உன் காதலில் பூவெல்லாம் கேட்டுப்பார் சூர்யா

உன் மறதியில் கஜனி சூர்யா
உன் சில செயல்களில் ஆய்த எழுத்து சூர்யா

உன் நட்பில் பிரெண்ட்ஸ் சூர்யா
உன் பாசத்தில் வாரணம் ஆயிரம் சூர்யா

உன் கரிசனையில் பேரழகன் சூர்யா
உன் அடாவடியில் ஆறு சூர்யா

உன் நகைச்சுவையில் மாயாவி சூர்யா
உன் வம்பில் அயன் சூர்யா

Saturday, January 23, 2010

உனக்குத் தெரியுமா . . .


என்னுடைய ஒவ்வொரு நாளும் உன்னோடான
தொலைபேசி உரையாடலில் தான் தொடக்கப்படுகிறது

என் இருபத்து நான்கு மணிநேரமும் உன்னோடான
ஒரு மணி நேர அரட்டையில் தான் அடக்கப்படுகிறது

என்னுடைய நேசத்தின் ஆழம் உன்னோடான
கோபதாபங்களில் தான் தெரியப்படுகிறது

என் உணவு வேளைகள் உன்னோடான
மின்னஞ்சல்களில் தான் சுருக்கப்படுகிறது

என்னுடைய இரவுகள் உன்னோடான
குறுஞ் செய்திகளில் தான் முடிக்கப்படுகிறது

என் கனவுகளின் ஆரம்பம் உன்னோடான
தொலைதூரப் பயணங்களில் தான் காணப்படுகிறது

என்னுடைய பெண்மையின் தன்மை உன்னோடான
பொழுதுகளில் தான் அறியப்படுகிறது

என் இன்பதுன்பத்தின் எல்லைகள் உன்னோடான
பகிர்தலில் தான் அளவிடப்படுகிறது

என்னுடைய வெட்கத்தின் முகவரி உன்னோடான
சந்திப்புகளில் தான் வெளிப்படுகிறது

என் சுவாசத்தின் அடையாளம் உன்னோடான
நெருக்கத்தில் தான் பெறப்படுகிறது

என்னுடைய இதயத்தின் துடிப்பு உன்னோடான
அணைப்பில் தான் உணரப்படுகிறது

என் உயிரின் ஓசை உன்னோடான
முத்தங்களில் தான் கேட்கப்படுகிறது

என்னுடைய காதலின் அர்த்தம் உன்னோடான
வாழ்க்கையில் தான் தீர்மானிக்கப்படவுள்ளது

Friday, January 22, 2010

கண்ட நாள் முதல் . . .



உன்னைக் கண்ட நாள் முதல்
பல்வேறு மாற்றங்கள் என்னுள்ளே . . .

கண்கள் கனவுகளில் நிறைந்து போனது
காதல் நெஞ்சில் கலந்து போனது

துக்கம் தூரமாய்ப் போனது
தூக்கம் தொலைந்து போனது

சின்னச் சின்ன தாபங்கள் வந்து போனது
சீறிச் சினப்பது சகஜமாய்ப் போனது

செல்லும் இடமெல்லாம் வெறுமையாய்ப் போனது
சேர்ந்து சுற்றப் பிரியமாய்ப் போனது

தனியே சிரிப்பது பழகிப் போனது
தானே பேசுவது வழமையாகிப் போனது

திரும்புமிடமெல்லாம் உன் விம்பம் ஓடிப் போனது
தீராத ஆசைகள் உன் மேல் கூடிப் போனது

பசியென்பதே பறந்து போனது
பார்வையெல்லாம் புதிதாய்ப் போனது

வெறுமை எல்லாம் கரைந்து போனது
வேற்றுமை எல்லாம் மறைந்து போனது

நினைவெல்லாம் உனதாகிப் போனது
நீயே எந்தன் உயிரென்றாகிப் போனது

Sunday, January 17, 2010

ஏனோ . . . ?


உன்னைப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும்
ஒரு சிறு செயலே போதுமானதாக இருப்பதுமேனோ. . .

உன் குரல் அலைபேசியில் கேட்டதும்
என்னுள் ஏதேதோ நடப்பதுமேனோ. . .

உன்னுடன் பகிர வரும் விடயங்களும்
நம் சந்திப்பில் மாயமாவதுமேனோ. . .

உன் கரம் கோர்த்து நடக்கும் வேளையில்
எதையும் சந்திக்கும் தைரியம் வருவதுமேனோ. . .

உன்னைக் கனவில் காண்கையில் கூட
என்னுள்ளே பட்டம் பூச்சிகள் பறப்பதுமேனோ. . .

உன் மேல் வரும் கொள்ளை ஆசையும்
ஒரு நொடியில் கடுங் கோபமாவதுமேனோ. . .

உன்னிடம் இவற்றைக் கேட்க நினைப்பதும்
பின் கேட்டகாமலே விடுவதும் வழமைதானோ. . .

உன் மௌனம் . . .


உன்னுடன் யாவற்றையும் பேசிப் பகிர்வதே
என் வாழ்வென நான் நினைக்கையில் - இன்றைய
உன் மௌனம் கொல்கின்றது என்னைச்
சிறிது சிறிதாய் . . .

Thursday, January 14, 2010

நம் பார்வையும் . . . சுவர்களும் . . .



உன்னுடன் இல்லாத நேரங்களில்
உன்னைப் பார்க்கத் தோன்றும்
உன்னைக் கண்டதும் உன் கண்களைப் பார்க்கும்
தைரியம் ஏனோ இல்லை - என் கண்களுக்கு
இதுவரை பார்க்காதது போன்று அவை
சுற்றியுள்ள சுவர்களைச் சுற்றுகின்றன

சரி நீயாவது என்னைப் பார்க்கின்றாயா என்றால் - ஆம்!
நீ என்னைப் பார்க்கின்றாய் - நான்
உன்னை கண்களைப் பார்க்காத போது
இல்லையெனில் நீயும் பார்ப்பதென்னவோ
அதே சுவர்களைத் தான் - உன்னையும்
காட்டிக் கொடுத்து விட்டன - உன் கண்கள்
என்னுடையவற்றைப் போன்றே!

Tuesday, January 12, 2010

"அப்புறம் . . . , பிறகு . . ., வேறென்ன . . ."


நீ பேசுவாய் என நானும்
நான் பேசுவேன் என நீயும்
"அப்புறம், பிறகு, வேறென்ன" என நீட்டி இழுக்கிறோம்
நேரம் வெறுமே செல்வதை உணர்ந்தும்
இது ஒரு வகைத் தந்திரம் என்பதைத் தெரிந்தும்
தெரியாதது போல் காட்டியவாறு!

Saturday, January 9, 2010

விலகல் . . .




என்னிடமிருந்து விலகுவதாக நினைக்கின்றாய்
விலகவில்லை - நீ வருத்துகின்றாய்
என்னையும் உன்னையும்!